வகுப்புவாத வன்முறையை தூண்டும் வகையில், அயோத்தியில் உள்ள சில மசூதிகளுக்குள் பன்றி இறைச்சி, இஸ்லாமியர்கள் இழிவுபடுத்தும் வகையில் எழுத்தப்பட்ட கடிதங்கள், இஸ்லாமிய உரையின் கிழித்த பக்கங்கள் ஆகியவற்றை வீசிய ஏழு பேரை உத்திரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ‘இந்து யோதா சங்கதான்’ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், அதன் தலைவர் மீது ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாட்ஷா ஜமா மசூதி, கோசியானா மசூதி, காஷ்மீரி மொஹல்லாவில் உள்ள மசூதி, குலாப் ஷா பாபா எனப்படும் மசார் ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக நான்கு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டிருப்பதாக பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
“இது அயோத்தியில் வகுப்புவாத கலவரத்தை உருவாக்கி கலவரத்தை தூண்டும் முயற்சி. இந்த சதியில் மொத்தம் 11 பேர் ஈடுபட்டுள்ளனர். அதில் நான்கு பேர் தப்பிச் சென்று விட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மண்டை ஓடுகள், குரானின் இரண்டு பிரதிகள், பன்றி இறைச்சி மற்றும் எழுதும் பொருட்களை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது” என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ‘இந்து யோகா சங்கதான்’ அமைப்பின் தலைவர் மகேஷ் மிஸ்ரா மற்றும் உறுப்பினர்கள் பிரத்யுஷ் குமார், நிதின் குமார், தீபக் கவுட், பிரஜேஷ் பாண்டே, சத்ரூகன், விமல் பாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு மகேஷ் மிஸ்ரா என்பவர் மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள காவல்துறையினர், சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதிராக (ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி தினத்தில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறை) இந்த செயல்கள் திட்டமிட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 (எந்த வகுப்பினரின் மதத்தையும் அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலங்களை காயப்படுத்துதல் அல்லது அசுத்தப்படுத்துதல்), 295A (எந்த வகுப்பினரின் மத உணர்வுகளை அவமதிப்பதன் மூலம் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கில் செய்யப்படும் செயல்கள்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.